அமெரிக்கா, ஈரான் மற்றும் அவற்றின் நட்பு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் பாராட்டியுள்ளார். இந்த போர் நிறுத்தம் லெபனான் உட்பட “எல்லா இடங்களுக்கும்” பொருந்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ஷேபாஸ் ஷெரீப் X தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: “இஸ்லாமிய குடியரசு ஈரான் மற்றும் அமெரிக்கா, அவற்றின் நட்பு நாடுகளுடன் சேர்ந்து, லெபனான் மற்றும் பிற இடங்கள் உட்பட எல்லா இடங்களிலும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், இது உடனடியாக அமலுக்கு வருகிறது.”
மேலும், “அனைத்து சர்ச்சைகளையும் தீர்ப்பதற்கான” மேலதிக பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்கா மற்றும் ஈரானின் தலைவர்களை இஸ்லாமாபாத்திற்கு அவர் அழைத்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தைகள் ஏப்ரல் 10 வெள்ளிக்கிழமை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளன.
“இந்த ‘இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகள்’ நிலையான அமைதியை அடைவதில் வெற்றியடையும் என்று நாங்கள் மனதார நம்புகிறோம், மேலும் வரும் நாட்களில் கூடுதல் நல்ல செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்,” என்று ஷெரீப் மேலும் தெரிவித்துள்ளார்.
தெஹ்ரான் மற்றும் வாஷிங்டன் ஆகிய இரு நாடுகளுடனும் நீண்டகால உறவுகளைக் கொண்டிருப்பதாலும், ஈரானுடனான கலாச்சார மற்றும் மதத் தொடர்புகளாலும், பாகிஸ்தான் இந்த மோதலில் அமைதித் தரகராகத் தன்னைப் நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
