கொழும்பு, ஜனவரி 20: இலங்கையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் (AI – Artificial Intelligence) வளர்ச்சி காரணமாக, தற்போது பணியில் உள்ளவர்களில் 23.8 சதவீதமானோர் தங்கள் வேலைகளை இழக்கும் அபாயம் உள்ளதாக ‘டெய்லி மிரர்’ நாளிதழ் வெளியிட்டுள்ள பிரதான செய்தி, இன்று (20) பாராளுமன்றத்தில் பெரும் விவாதப்பொருளானது.
ஹர்ஷ டி சில்வாவின் ஆதங்கம்: இந்தச் செய்தியைச் சுட்டிக்காட்டிப் பேசிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva), AI தொழில்நுட்பம் ஏற்கனவே இலங்கையில் சில வேலைவாய்ப்புகளைப் பாதிக்கத் தொடங்கிவிட்டதாகத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் தனது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்: “கடந்த காலங்களில், தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்களில் இளைஞர்களுக்குத் தொழிற்பயிற்சி (Internships) வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்க நான் உதவி செய்து வந்தேன். ஆனால், சமீப காலமாக என்னால் அதனைச் செய்ய முடியவில்லை. ஏனெனில், இலங்கையில் உள்ள பெரும்பாலான IT நிறுவனங்கள் தற்போது AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதால், அவர்களுக்கு மனித வலுவின் (manpower) தேவை குறைந்துவிட்டது,” என்று அவர் கவலையுடன் சுட்டிக்காட்டினார்.
செயற்கை நுண்ணறிவின் அசுர வளர்ச்சி, இலங்கையின் எதிர்கால வேலைவாய்ப்புச் சந்தையில் பாரிய சவால்களை ஏற்படுத்தும் என்பதை இது காட்டுவதாகப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
