பல அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் புனித ரமழான் மாதத்தை இன்று (புதன்கிழமை) வரவேற்கின்றன, அதே சமயம் ஏனைய சில நாடுகள் ஒரு நாள் கழித்து நோன்பைத் தொடங்கவுள்ளன.
புனித ரமழான் மாதத்திற்கான புதிய பிறை நேற்று மாலை தென்பட்டதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது. அதற்கமைய, அங்கு இன்று நோன்பு ஆரம்பமாகின்றது.
கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், குவைத், பஹ்ரைன், பாலஸ்தீனம், சூடான், சோமாலியா மற்றும் ஜிபூட்டி ஆகிய நாடுகளின் மத அதிகாரிகள் புதன்கிழமை ரமழானின் முதல் நாள் என்று அறிவித்துள்ளனர்.
ஈராக்கின் சன்னி மற்றும் ஷியா பிரிவினரும், யேமனின் ஹூதி குழுவினரும், லெபனானின் சன்னி முஸ்லிம்களும் புதன்கிழமையே நோன்பை ஆரம்பிக்கின்றனர்.
நாளை ஆரம்பிக்கும் நாடுகள்:
இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை மாலை புதிய பிறை தென்படாததால், எகிப்து வியாழக்கிழமை புனித ரமழான் மாதத்தை அனுஷ்டிக்கும் என்று அந்நாட்டின் முஃப்தி நசீர் அய்யாத் தெரிவித்துள்ளார்.
ஜோர்டான், சிரியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான், ஈரான், துனிசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் மத அதிகாரிகளும் வியாழக்கிழமை புனித மாதம் தொடங்குவதாக அறிவித்துள்ளனர்.
துருக்கி, ஓமான், சிங்கப்பூர் மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள முஸ்லிம்கள் வானியல் கணக்கீடுகளின் அடிப்படையில் புனித மாதத்தின் தொடக்கத்தை அதிகாரிகள் உறுதிப்படுத்திய பின்னர், வியாழக்கிழமை ரமழான் நோன்பைத் தொடங்குவார்கள்.
மொராக்கோவில் நோன்பு மாதத்தின் தொடக்கத்தைத் தீர்மானிக்க புதன்கிழமை ரமழான் பிறை பார்க்கப்படும்.
ரமழான் என்பது இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும். சில நாடுகள் உள்ளூர் பிறை பார்ப்பதை நம்பியிருக்கும் அதே வேளையில், மற்ற நாடுகள் மாதத்தின் தொடக்கத்தைத் தீர்மானிக்க வானியல் கணக்கீடுகளை அதிகளவில் பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
