Headlines

கொழும்பு துறைமுக சீர்திருத்தங்கள் கோரிக்கை: இலங்கையின் ஆடைகள் ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தல்!

கொழும்பு, நவ. 8 இலங்கையின் ஆடைகள் ஏற்றுமதியாளர்களின் உச்ச அமைப்பான கூட்டு ஆடை சங்கங்கள் மன்றம் (JAAF), கொழும்பு துறைமுகத்தில் சீர்திருத்தங்களை கோரியுள்ளது. தாமதங்களால் ஏற்படும் செயல்திறன் குறைபாடுகள் காரணமாக வர்த்தகர்கள் பிராந்தியத்தில் தங்கள் போட்டித்தன்மையை இழப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“இலங்கை செயல்திறன் குறைபாடுகளுடன் போராடும் அதேவேளையில், எமது பிராந்தியப் போட்டியாளர்கள் முன்னேறிச் செல்கின்றனர். இந்தியாவின் புதிய விழிஞ்ஞம் துறைமுகம் மற்றும் சிங்கப்பூர், துபாயில் உள்ள பிற துறைமுகங்கள் இப்போது தடையற்ற டிஜிட்டல் ஒருங்கிணைப்பு, விரைவான கப்பல் சுழற்சி மற்றும் முழு தானியங்கி அமைப்புகளை வழங்குகின்றன,” என JAAF வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இதன் விளைவாக, ஒரு காலத்தில் கொழும்பு வழியாக வந்த சில கப்பல் போக்குவரத்துகள் இப்போது வேறு துறைமுகங்களுக்குத் திருப்பி விடப்படுகின்றன,” என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த சில மாதங்களாக, பல கப்பல் நிறுவனங்கள் கொழும்பைத் தவிர்த்து, சில சமயங்களில் வந்து சேருவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பே மாற்றுப் பாதைகளைத் தேர்ந்தெடுத்ததை JAAF சுட்டிக்காட்டியுள்ளது.

துணி, ஜிப்பர்கள், பொத்தான்கள் அல்லது அலங்காரப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கொள்கலன்கள் கொண்ட கப்பல்கள் கொழும்பைத் தவிர்ப்பது, வேறு துறைமுகத்தில் இறக்கப்படுவதையோ அல்லது பல நாட்கள் தாமதமாக வந்து சேருவதையோ குறிக்கிறது என JAAF இன் தலைவர் யோஹான் லாரன்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“கடுமையான கால அட்டவணையில் பணிபுரியும் உற்பத்தியாளர்களுக்கு, ஒரு சிறிய தாமதம் கூட உற்பத்தி காலக்கெடுவைத் தவறவிடவோ, தாமதமான விநியோகங்களுக்கோ அல்லது வாடிக்கையாளர்களுடன் ஒப்புக்கொள்ளப்பட்ட காலக்கெடுவை பூர்த்தி செய்ய அதிக செலவில் முடிக்கப்பட்ட பொருட்களை விமானம் மூலம் அனுப்ப வேண்டிய தேவையை ஏற்படுத்தலாம்.”

துறைமுகம் செயல்படும் விதத்திலேயே உண்மையான பிரச்சினை உள்ளது என்று JAFF வலியுறுத்துகிறது. முனையங்களுக்கு இடையேயான கொள்கலன் நகர்வில் ஏற்படும் தாமதங்கள், காலாவதியான கையேடு அமைப்புகள் மற்றும் துறைமுக நிறுவனங்களுக்கு இடையேயான மெதுவான ஒருங்கிணைப்பு ஆகியவை அனைத்தும் ஒரு தீவிரமான முட்டுக்கட்டையை உருவாக்கியுள்ளுள்ளன.

“டிஜிட்டல் முன் அனுமதிப்பத்திரத்தை ஒழுங்குபடுத்துதல், சரக்கு கண்காணிப்பை மேம்படுத்துதல் மற்றும் முனையங்களுக்கு இடையே தடையற்ற ஒருங்கிணைப்பை உறுதி செய்தல் போன்ற செயல்பாட்டு சீர்திருத்தங்களில் கவனம் செலுத்த வேண்டும்” என்று JAAF அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

இது குறித்து அரசாங்கத்திடமிருந்து உடனடி கருத்து எதுவும் வெளியாகவில்லை.

இலங்கையின் வர்த்தகர்கள், தமது நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதி இலக்குகளில் ஒன்றான அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வரி விதிக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு இந்த கோரிக்கை எழுந்துள்ளது.

முன்னதாக, அமெரிக்கா, ஆகஸ்ட் 7 ஆம் திகதி முதல் இலங்கை ஏற்றுமதிகளுக்கு 20 சதவீத வரியை அறிவித்திருந்தது. முன்னதாக அறிவிக்கப்பட்ட 44 சதவீத வரியிலிருந்து குறைக்கப்பட்ட இந்த 20 சதவீத வரி, பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் போன்ற ஆடை ஏற்றுமதித் துறையில் உள்ள முக்கிய போட்டியாளர்களுக்கு இணையாக இலங்கையை நிறுத்தியுள்ளது என்று அப்போதைய அரசாங்கத்தின் முக்கிய பேச்சுவார்த்தையாளர் ஹர்ஷனா சூரியப்பருமா தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *