ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ட்ரம்பின் விசேட பிரதிநிதியுடன் நியூயோர்க்கில் சந்திப்பு!
நியூயார்க்: அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான விசேட பிரதிநிதியை கடந்த செவ்வாய்க்கிழமை (23) பிற்பகல் நியூயோர்க்கில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
நியூயோர்க்கில் உள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீடு உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.
பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்ட மிக நெருக்கமான உறவை அமெரிக்காவுடன் பேண விரும்புவதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல் உள்ளிட்ட, நாட்டின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் சீர்திருத்தங்கள் குறித்தும் அவர் விளக்கினார்.
