கொழும்பு, ஜனவரி 13: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
சந்திப்பின் முக்கிய முடிவுகள்:
- தரம் 6 சீர்திருத்தம் ஒத்திவைப்பு: பாட அலகுகள் (Modules) தயாரிப்பில் தாமதம், ஆசிரியர் பயிற்சி மற்றும் தொழில்நுட்பச் சவால்கள் காரணமாக, தரம் 6 கல்விச் சீர்திருத்தங்களை 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, தரம் 1 சீர்திருத்தங்கள் திட்டமிட்டபடி தொடரும்.
- பெற்றோருக்குச் சுமையில்லை: பாடசாலைகளுக்குத் தேவையான ஸ்மார்ட் போர்டுகள் (Smart boards), தொலைக்காட்சிகள் மற்றும் கணினிகள் அரசாங்க நிதியிலேயே வழங்கப்படும் எனவும், இதற்காகப் பெற்றோரிடமிருந்து பணம் வசூலிக்கப்படாது எனவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
தொழிற்சங்கங்களின் நிலைப்பாடு: ஜோசப் ஸ்டாலின் (இலங்கை ஆசிரியர் சங்கம்), வண. வகமுல்லே உதித தேரர் உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவர்கள், கல்விச் சீர்திருத்தத்தின் அவசியத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் எனத் தெரிவித்துள்ள அவர்கள், இச்செயற்பாட்டை தேசிய கல்வி ஆணைக்குழு மற்றும் கல்வியலாளர்கள் அடங்கிய முறையான பொறிமுறை ஒன்றின் ஊடாக முன்னெடுக்குமாறு கோரியுள்ளனர்.
பிற விடயங்கள்: ஆசிரியர் இடமாற்றம், பதவி உயர்வு, சம்பள முரண்பாடுகள் மற்றும் அதிபர் சேவையில் உள்ள சிக்கல்கள் குறித்தும் இச்சந்திப்பில் ஆராயப்பட்டது.
