கொழும்பு: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, சற்று முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) வருகை தந்துள்ளார்.
பாதாள உலகக் குழுத் தலைவன் என்று கூறப்படும் “கெஹெல்பத்தர பத்மே” (Kehelbaddara Padme) என்பவருடன் தொடர்புகளைப் பேணியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ஷ முன்னதாகவே CID யில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்த போதிலும், அந்த நேரத்தில் அவர் வெளிநாட்டில் இருந்ததால், வேறு ஒரு திகதியைக் கோரியிருந்தார். அதற்கமையவே இன்றைய தினம் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
ஷிராந்தி ராஜபக்ஷவும் முன்னிலை
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் நாமல் ராஜபக்ஷவின் தாயாருமான முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ, இன்று காலை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு (FCID) வருகை தந்துள்ளார்.
‘சிரிலிய’ (Siriliya) நிதியத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப்பதிவு செய்வதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
