Headlines

மத்திய வங்கி வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: 7.75% ஆகத் தொடர்கிறது

(கொழும்பு) – இலங்கை மத்திய வங்கி (CBSL), தனது நாளாந்த கொள்கை வட்டி விகிதத்தை (OPR) மாற்றமின்றி 7.75% ஆகத் தொடர முடிவு செய்துள்ளது. நேற்று (27) நடைபெற்ற நாணயச் சபைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

உள்நாட்டுப் பொருளாதார நிலவரங்கள் மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மைகளைத் தீர்க்கமாகப் பரிசீலித்த பின்னரே நாணயச் சபை இந்த முடிவை எடுத்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

தற்போதைய நாணயக் கொள்கையானது, பணவீக்கத்தை 5% என்ற இலக்கை நோக்கி நகர்த்த உதவும் என்று நாணயச் சபை கருதுகிறது. கடந்த டிசம்பர் 2025 இல், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (CCPI) படி பணவீக்கம் 2.1% ஆக மாற்றமின்றித் தொடர்ந்தது. இருப்பினும், நவம்பர் மாதத்தை விட டிசம்பர் மாதத்தில் உணவுப் பொருட்களின் விலைகள் சற்று அதிகரித்துக் காணப்பட்டன. ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட விநியோகத் தடை மற்றும் பண்டிகைக் கால தேவை அதிகரிப்பு ஆகியவையே இதற்குக் காரணமாக அமைந்தன.

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பணவீக்கம் படிப்படியாக அதிகரித்து 5% என்ற இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. உணவு, எரிபொருள் மற்றும் போக்குவரத்து தவிர்ந்த மையப் பணவீக்கமும் (Core Inflation) அண்மைய மாதங்களில் சற்று அதிகரிப்பைக் காட்டியுள்ளது. பொருளாதாரத்தில் தேவை அதிகரித்து வருவதால், இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நாட்டின் பொருளாதாரம் 5.0% வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2025 இறுதியில் வீசிய ‘டிட்வா’ சூறாவளியால் பொருளாதார நடவடிக்கைகளில் சிறு மந்தநிலை ஏற்பட்டாலும், ஆரம்பக்கட்ட தரவுகள் பொருளாதாரம் மீளெழுச்சி பெறுவதையே காட்டுகின்றன. மேலும், வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கடன் தொகையும் 2025 இறுதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

பணவீக்கத்தை 5% இலக்கில் நிலைநிறுத்தவும், அதேவேளை பொருளாதார வளர்ச்சியை அதன் முழுத் திறனுக்குக் கொண்டு செல்லவும் தேவையான கொள்கை நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக நாணயச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *