பெய்ரூட்: லெபனான் மீது இஸ்ரேல் நேற்று (08) நடத்திய வான்வழித் தாக்குதல்களில், அங்கு பணிபுரியும் இலங்கை பெண் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பில், காயமடைந்த இலங்கை பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும், அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், லெபனான் மீது இஸ்ரேல் வெறும் 10 நிமிட இடைவெளியில் நடத்திய தொடர்ச்சியான பாரிய வான்வழித் தாக்குதல்களில் இதுவரை 254 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 1,165 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் லெபனான் சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இஸ்ரேல் – லெபனான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
