சர்வதேச செய்திகள், ஜனவரி 26: உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 5,000 அமெரிக்க டாலர்களைக் (சுமார் £3,659) கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் தங்கம் விலை 60% இக்கும் அதிகமாக உயர்ந்துள்ள நிலையில், இந்த வரலாற்று ஓட்டம் இன்றும் தொடர்கிறது.
விலை உயர்வுக்கான முக்கிய காரணங்கள்:
உலகளாவிய நிதி மற்றும் அரசியல் நிச்சயமற்ற தன்மையே இந்தத் திடீர் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
- அமெரிக்கா – நேட்டோ மோதல்: கிரீன்லாந்து (Greenland) விவகாரம் தொடர்பாக அமெரிக்காவிற்கும் நேட்டோவிற்கும் (NATO) இடையே நிலவும் பதற்றம் முதலீட்டாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
- ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகள்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகள் சந்தையில் கவலையை ஏற்படுத்தியுள்ளன. கனடா சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால், கனடா மீது 100% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தார்.
பாதுகாப்பான முதலீடு (Safe-haven Assets):
உக்ரைன் மற்றும் காசா போர்கள், அத்துடன் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை வாஷிங்டன் கைப்பற்றியது போன்ற புவிசார் அரசியல் குழப்பங்கள் காரணமாக, முதலீட்டாளர்கள் பங்குகளிலிருந்து விலகி, பாதுகாப்பான முதலீடான தங்கம் மற்றும் விலையுயர்ந்த உலோகங்களை நோக்கித் திரும்பியுள்ளனர்.
மேலும், வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ள பணவீக்கம், அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சி, மற்றும் உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகளவில் கொள்வனவு செய்வது போன்ற காரணிகளும் விலை உயர்வைத் தூண்டியுள்ளன. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் இந்த ஆண்டு மீண்டும் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பும் சந்தையில் நிலவுகிறது.
வெள்ளியும் சாதனை:
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, வெள்ளி விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 100 டாலரைத் தாண்டியது. கடந்த ஆண்டில் மட்டும் வெள்ளி விலை கிட்டத்தட்ட 150% உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
