தமிழக அரசியல் களத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் தளபதி விஜய், வரவிருக்கும் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடவுள்ளார். இதற்கிடையில், அவரது கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் இன்னும் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடித்து வருவது ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘தி கேரளா ஸ்டோரி 2’ மற்றும் சீமான் நடித்துள்ள ‘எல்ஐகே’, ரீ-ரிலீஸ் ஆகும் ‘தம்பி’, ‘அமைதிப்படை’ போன்ற பல அரசியல் தொடர்புடைய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ள நிலையில், விஜய்யின் படத்திற்கு மட்டும் சென்சார் கிடைக்காதது அரசியல் அழுத்தம் காரணமாகவே எனப் பரவலாக விமர்சிக்கப்படுகிறது. மேலும், ஓடிடி தளங்களில் எவ்வித தணிக்கையுமின்றி அனைத்து மொழிப் படங்களும் தாராளமாக வெளியாகும் போது, தணிக்கைக் குழு என்ற ஒன்றே காலாவதியாகிவிட்டதாகவும் திரைத்துறையினர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
தேர்தல் முடியும் வரை ‘ஜனநாயகன்’ முழுப்படமும் வெளியாக வாய்ப்பில்லை என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இதனால் அரசியல் களத்தில் விஜய்க்கு இந்தப் படத்தின் மூலம் கிடைக்கவிருந்த மைலேஜ் கிடைக்காமல் போகுமோ எனப் பலரும் நினைத்திருந்தனர். ஆனால், அங்குதான் விஜய் தனது பக்கா பிளானை வைத்துள்ளார்.
படத்தின் முழுமையான ரிலீஸுக்குப் பதிலாக, திரைப்படத்தில் உள்ள வீரியமான அரசியல் காட்சிகள் அடங்கிய ‘ஸ்நீக் பீக்’ (Sneak Peek) அல்லது க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை தேர்தலுக்குச் சற்று முன்னதாக வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே வெளியான டீசர் மற்றும் ட்ரெய்லர் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த ஒற்றைக் காட்சி வெளியானால், முழுப் படமும் வெளியாகி ஏற்படுத்தும் தாக்கத்தை விடப் பல மடங்கு அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது!
