கொழும்பு, பிப். 23 இந்தியாவின் அயோத்தி சிவன் கோயிலின் தலைமை அர்ச்சகரான கைலாஷானந்த் கிரி ஜி மகாராஜ் (Kailashanand Giri ji Maharaj) தலைமையிலான 14 பேர் கொண்ட குழுவினர், விசேட விஜயமாக இன்று (23) காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
சமய மற்றும் பொதுமக்களை உள்ளடக்கிய இந்தக் குழுவினர், புதுடெல்லியிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-192 விமானம் மூலம் வந்தடைந்தனர். இவர்களை சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க விமான நிலையத்தில் வரவேற்றார்.
விஜயத்தின் நோக்கம்:
இந்த விஜயத்தின் போது, இந்தக் குழுவினர் இலங்கையில் உள்ள முக்கிய சிவன் கோயில்களுக்குச் சென்று தரிசிக்கவுள்ளனர். இதில் மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம், யாழ்ப்பாணத்தில் உள்ள நகுலேஸ்வரம், திருகோணமலையில் உள்ள கோணேஸ்வரம், நுவரெலியாவில் உள்ள சீதா அம்மன் கோயில் மற்றும் பொலன்னறுவையில் உள்ள பழமையான சிவன் கோயில் தளங்கள் ஆகியவை அடங்கும்.
மேலும், இந்தக் குழுவினர் தமது விஜயத்தின் போது வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்துடன் விசேட கலந்துரையாடலொன்றிலும் ஈடுபடவுள்ளனர்.
