இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெற்ற ‘AI இம்பாக்ட் உச்சிமாநாடு 2026’ (AI Impact Summit 2026) நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் இலங்கைக் குழுவினர் நாடு திரும்பியுள்ளனர்.
புதுடெல்லியிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-196 என்ற விமானம் மூலம், ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் சற்று முன்னர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில், இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்தியா சென்றிருந்தார்.
முக்கிய சந்திப்புகள்:
இந்த விஜயத்தின் போது, புதுடெல்லியில் நடைபெற்ற உலகளாவிய AI உச்சிமாநாட்டின் பக்க அம்சமாக, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இன்று (20) வெள்ளிக்கிழமை முக்கிய இருதரப்புச் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதேவேளை, இந்த உச்சிமாநாட்டின் இடையே பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் பிரேசில் ஜனாதிபதி லூலா ட சில்வா ஆகியோருடனும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
