கொழும்பு: இலங்கையின் பாதுகாப்புப் படைகளை, உலகின் மிகவும் தொழில்முறைப் படைகளில் ஒன்றாக மேம்படுத்த வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் நேற்று (26) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
போரின்போது உயிரிழந்த சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்களின் குடும்பங்களுக்கும், ஏனைய முப்படை வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் அதே நட்டஈட்டை வழங்குமாறு அவர் உத்தரவிட்டார். மேலும், கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக வைத்தியசாலையின் சேவைகளை மேலும் நெறிப்படுத்தி, பொதுமக்களுக்குத் திறமையாக வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்படும் வெளிநாட்டுப் பயிற்சிகளுக்கு விசேட கவனம் செலுத்துமாறும், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை முறையாக வழங்குமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். முப்படைத் தளபதிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
