கொழும்பு: இலங்கைக்கான கொரியக் குடியரசின் தூதுவர் மியோன் லீ, இன்று (18) பிற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமணாயக்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்போது, தமது புதிய அரசாங்கம், இலங்கையின் முன்னுரிமைகளை ஏற்று, நாட்டுடன் மிக நெருக்கமாகச் செயற்படத் தயாராக இருப்பதாகத் தூதுவர் உறுதியளித்தார். இலங்கையின் தேசிய முன்னுரிமைகளுக்கு கொரியா தனது தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையத்தின் (KOICA) புதிய பிரதிநிதிகளும் ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தனர். இலங்கையில் நடைபெற்றுவரும் (KOICA) திட்டங்களைத் துரிதப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.