இலங்கையின் பசுமை எரிசக்தித் துறைக்கு ஆதரவளிக்க ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இணக்கம்!
கொழும்பு: இலங்கையின் அபிவிருத்திக்கு, குறிப்பாக பசுமை எரிசக்தித் துறையின் மேம்பாட்டிற்குத் தொடர்ந்தும் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) தலைவர் ஜின் லிகுன் உறுதியளித்துள்ளார். அவர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இன்று (07) காலை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே இதனைக் கூறினார்.
இலங்கையில் AIIBயின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இந்தச் சந்திப்பின்போது மீளாய்வு செய்யப்பட்டது. எதிர்காலத்தில், இலங்கையின் எரிசக்தி ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வகையில், பசுமை எரிசக்தி மற்றும் பசுமைப் போக்குவரத்து போன்ற துறைகளில் கவனம் செலுத்தப்படும் என ஜின் லிகுன் குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பயன்களை மக்களுக்கு வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனத் தெரிவித்த ஜனாதிபதி, வட்டி வீதக் குறைப்பு, பணவீக்கக் கட்டுப்பாடு உள்ளிட்ட முன்னேற்றங்கள் குறித்து விளக்கினார். செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் அரச சேவைகளை மேம்படுத்துதல், விவசாயம் மற்றும் மீன்பிடித்துறைகளின் உற்பத்தித்திறனை அதிகரித்தல் போன்ற அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
