கொழும்பு, நவம்பர் 25: இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தின் கீழ் மட்டத் தளம்பல் நிலை காரணமாக, இன்று (நவம்பர் 25) முதல் அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்பார்க்கிறது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானம் காணப்படும்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
தீவின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தீவின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அன்புடன் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
