கொழும்பு, நவம்பர் 20: இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் இன்று (நவம்பர் 20) இரண்டாவது தடவையாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த போதே இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இன்று பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, இந்த ஒப்பந்தம் முன்னர் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், ஆவணத்தின் சிங்கள மொழிப் பதிப்பு மட்டுமே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஜயசேகர, இந்த ஒப்பந்தம் உத்தியோகபூர்வமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறினார்.
இதற்குப் பதிலளித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் மூன்றாவது வாசிப்பு விவாதத்தின் போது இந்த ஒப்பந்தம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டது என்றும், இன்று அவர் அதை மீண்டும் சமர்ப்பிக்கிறார் என்றும் கூறினார்.
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், அமெரிக்காவும் இலங்கையும் நவம்பர் 14 அன்று பாதுகாப்பு அமைச்சில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கையெழுத்திட்டன.
அமெரிக்க அரசாங்கத்தின் சார்பில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் மொன்டானா தேசிய காவல்படையின் துணைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் ட்ரெண்டன் கிப்சன் ஆகியோரும், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பாதுகாப்புச் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயாகொந்த (ஓய்வு) ஆகியோரும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம், அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் மாநில கூட்டாண்மைத் திட்டத்தின் (SPP) கீழ் மொன்டானா தேசிய காவல்படை, அமெரிக்க கடலோர காவல்படை மாவட்டம் 13 மற்றும் இலங்கை ஆயுதப் படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை முறைப்படுத்துகிறது என்று பாதுகாப்பு அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், மேஜர் ஜெனரல் ஜெயசேகர (ஓய்வு), புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இது இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நீடித்த பாதுகாப்பு கூட்டாண்மையில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது என்று கூறினார்.
“இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் எமது பகிரப்பட்ட மூலோபாய நலன்களையும் பரஸ்பர உறுதிப்பாட்டையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது திறன் மேம்பாடு, கூட்டுப் பயிற்சி, மனிதாபிமான உதவி, அனர்த்த நிவாரணம், சைபர் பாதுகாப்பு, சமாதானப் பாதுகாப்பு, CBRN பதிலிறுப்பு மற்றும் தலைமைத்துவ மேம்பாடு ஆகியவற்றில் மேம்பட்ட ஒத்துழைப்புக்கான வழியை வகுக்கிறது. அமெரிக்காவின் அசைக்க முடியாத நட்பு, ஒற்றுமை மற்றும் தாராள மனப்பான்மையை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம், இந்த முக்கியமான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது கருத்துக்களில் அமெரிக்கா – இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். இரண்டு நாடுகளுக்கிடையேயான ஆழமான மற்றும் நீடித்த நட்புறவை வலியுறுத்தினார். தொடர்ச்சியான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர புரிதலின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். பகிரப்பட்ட மதிப்புகளின் அடிப்படையில் கட்டப்பட்ட நீண்டகால கூட்டாண்மையை அவர் ஏற்றுக்கொண்டதுடன், புதுப்பிக்கப்பட்ட உறுதிப்பாடுகள் பகிரப்பட்ட பயிற்சி மற்றும் கற்றல் வாய்ப்புகளை அனுமதிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன், அமெரிக்க மாநில தேசிய காவல்படைகளுடன் இணைந்து செயல்படும் 115 நாடுகளின் உலகளாவிய வலையமைப்பில் இலங்கை முறையாக இணைந்துள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் முதல் தொடர் கூட்டு நடவடிக்கைகள் 2026 இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அனர்த்த நிவாரணம், கடல்சார் கள விழிப்புணர்வு மற்றும் தொழில்முறை இராணுவக் கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்தும். கூட்டுப் பயிற்சி, கடத்தல்கள் மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தை எதிர்ப்பதற்கான கடல்சார் ஒத்துழைப்பு, நெருக்கடி பதிலிறுப்பு மற்றும் மனிதாபிமான உதவி, விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள் மற்றும் வலுவான இராணுவ – சிவில் அனர்த்தத் தயார்நிலை மூலம் இயங்குத்தன்மையை இந்த கூட்டாண்மை மேம்படுத்தும் என்று பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டது.
