அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, திறமையான மற்றும் நம்பகமான வலுவான பொதுப் போக்குவரத்து அமைப்பை நிறுவுவதாகும். இந்த நோக்கத்தை அடைவதற்காக தேசிய கொள்கையை உருவாக்கி வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். போக்குவரத்து அமைப்பிலிருந்து பழைய பஸ்களை படிப்படியாக நீக்குவதற்கும், சரியான தரத்தை பூர்த்தி செய்யும் புதிய பஸ்களை அறிமுகப்படுத்துவதற்கும் அரசாங்கம் திட்டங்களை தயார் செய்து வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதை உடனடியாக நிறைவேற்ற முடியாது என்றாலும், பல ஆண்டுகளாக திட்டமிட்டபடி வேலை செய்வதன் மூலம், பொதுமக்களுக்கு உயர்தர பஸ் சேவையை வழங்க முடியும் என்றும் அவர் கூறினார். ஸ்ரீலங்கா போக்குவரத்துச் சபைக்கு (SLTB) புதிதாக நியமிக்கப்பட்ட 199 சாரதிகள் மற்றும் 342 நடத்துனர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் விழாவில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த கருத்துக்களைத் தெரிவித்தார். பல நியமனதாரர்களுக்கு நியமனக் கடிதங்களை ஜனாதிபதி அடையாளமாக வழங்கினார்.
இலங்கை மக்களுக்கும் SLTB க்கும் இடையே ஒரு வலுவான பிணைப்பு இருந்தது. ஆனால் காலப்போக்கில் அரசியல் நியமனங்கள் மற்றும் பல்வேறு ஒழுங்கற்ற ஒப்பந்தங்கள் காரணமாக அந்த நிறுவனம் மோசமடைந்துள்ளது. இன்று நியமனங்களை பெற்ற அனைவரும் நிறுவனத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவார்கள் என்று ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார். மேலும், அனைத்து புதிய நியமனதாரர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
