தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாட்டுத் தேர்தல் களம், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அனல் பறக்கிறது. ஆட்சியைத் தக்கவைக்க திமுக பிரம்மாண்ட கூட்டணியுடன் வியூகம் வகுக்க, இழந்த ஆட்சியைப் பிடிக்க அதிமுக – பாஜக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது. இதற்கிடையில், நாம் தமிழர் கட்சி, ராமதாஸ் – சசிகலா அணி மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என களம் ஐந்து முனைப் போட்டியாக மாறியுள்ளது. வாக்குள் சிதறும் என்பதால், அரசியல் களம் அதிரடித் திருப்பங்களைச் சந்தித்து வருகிறது.
தவெகவை வளைக்க பாஜகவின் மாஸ்டர் பிளான்! ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்த வேண்டுமென்றால், வாக்குகள் சிதறாமல் இருமுனைப் போட்டி உருவாக வேண்டும் என்பது பாஜக மேலிடத்தின் கணக்கு. இதற்காக, மக்கள் மத்தியில் பெரும் எழுச்சியை உருவாக்கியுள்ள விஜய்யின் தவெகவை தங்கள் கூட்டணியில் இணைக்க, மத்திய அமைச்சர் அமித்ஷா தீவிர முயற்சிகளை மேற்கொண்டதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
ஆரம்பத்தில் பாஜகவை தனது கொள்கை எதிரியாக அறிவித்த விஜய், கூட்டணிக்கு உடன்படவில்லை. ஆனால், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான சிபிஐ விசாரணை நெருக்கடி, ஜனநாயகன் படப் பிரச்சனை மற்றும் தனிப்பட்ட குடும்ப விவகாரங்கள் என பல்வேறு தரப்பிலிருந்து வந்த அழுத்தங்களால், கூட்டணி குறித்து விஜய் தரப்பு ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
டெல்லி ரகசியம்… ஜெய் ஷாவின் நேரடி மெசேஜ்! சமீபத்தில் கரூர் வழக்கு விசாரணைக்காக டெல்லி சென்ற விஜய், அங்கு அமித்ஷாவின் மகன் ஜெய் ஷாவுக்கு நெருக்கமானவர்களுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. அப்போது ஜெய் ஷா தரப்பிலிருந்து, “எங்கள் கூட்டணிக்கு வாருங்கள்; உங்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுக்கிறோம்” என விஜய்க்கு நேரடி மெசேஜ் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
விஜய்யின் செக்மேட் பதில்! இந்த அழைப்பிற்கு விஜய் அளித்த பதில்தான் இப்போது அரசியல் களத்தின் ஹாட் டாபிக். “எனக்கு திமுக, அதிமுக இருவரையும் பிடிக்கவில்லை. ஊழல் கட்சிகளான அவர்களுக்கு மாற்று சக்தியாக வளரவே நான் அரசியலுக்கு வந்துள்ளேன். என் கொள்கை எதிரி என உங்களை (பாஜக) அறிவித்துவிட்டு, முதல் தேர்தலிலேயே கூட்டணியில் இணைந்தால் மக்கள் மத்தியில் எனது இமேஜ் கடுமையாகப் பாதிக்கும். தற்போதைய அதிமுக கூட்டணியிலும் இணைய எனக்கு விருப்பமில்லை” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளாராம்.
மேலும், “இந்தத் தேர்தலில் என்னை விட்டுவிடுங்கள். என் உண்மையான பலத்தை முதலில் நிரூபிக்கிறேன். தேர்தலுக்குப் பிறகு நாம் பேசிக்கொள்ளலாம்” என விஜய் நாசுக்காகப் பதிலளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தனித்துப் போட்டி… நீண்ட கால அஜெண்டா! பாஜகவின் அழைப்பை முற்றிலுமாக நிராகரிக்காமல், ‘தேர்தலுக்குப் பின் பார்ப்போம்’ என விஜய் மறைமுக சிக்னல் கொடுத்துள்ளதே தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது. டெல்லிப் பயணத்திற்குப் பிறகு நடைபெற்ற தவெகவின் இப்தார் விருந்தில்தான், ‘தவெக தனித்துப் போட்டி’ என்ற அதிரடி அறிவிப்பை விஜய் வெளியிட்டார். இதன் மூலம், இரண்டு திராவிடக் கட்சிகளையும் வீழ்த்த வேண்டும் என்ற நீண்ட கால அஜெண்டாவுடன், தவெகவும் பாஜகவும் தங்களுக்குள் ஒரு புரிதலோடு பயணிக்கத் தொடங்கியுள்ளனவா என்ற மிகப்பெரிய கேள்வி தமிழக அரசியல் களத்தில் எழுந்துள்ளது.
