Headlines

நாடு தழுவிய ரீதியில் 48 மணிநேர வேலைநிறுத்தம்: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவிப்பு

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (09) காலை 8:00 மணி முதல் நாடு தழுவிய ரீதியில் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.

பேச்சுவார்த்தைகளின் போது இரு தரப்புக்கும் இடையில் ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளை மீறி, சுகாதார அமைச்சு பட்டப்பின்படிப்பு உள்ளகப் பயிற்சிகளை (Post-Graduate Internships) வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுகிறது.

மருத்துவர்களின் இடமாற்றச் செயல்முறையை அரசியலாக்கும் முயற்சிகளுக்குப் பதிலளிக்கும் வகையில் தமது சங்கம் பல தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்ததாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் தலையீட்டுடன், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கப் பிரதிநிதிகளுக்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவாதங்கள் முழுமையாக நிறைவடையும் வரை, சம்பந்தப்பட்ட உள்ளகப் பயிற்சி மருத்துவர்களின் இடமாற்றப் பட்டியலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதே இரு தரப்புக்கும் இடையிலான ஒப்பந்தமாக இருந்தது என GMOA சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும், அந்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் சுகாதார அமைச்சு சம்பந்தப்பட்ட மருத்துவர்களின் இடமாற்றப் பட்டியலை தன்னிச்சையாக வெளியிட்டுள்ளதாலேயே, இந்த 48 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *