பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்கான விசேட யோசனை இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
அண்மையில் ஏற்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பு, குறிப்பாக ஒட்டோ டீசல் விலை அதிகரிப்பானது, பஸ் கட்டண திருத்தச் சூத்திரத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது. இதன்படி, தற்போதைய கட்டணங்களுடன் ஒப்பிடுகையில் 10 சதவீதத்திற்கும் அதிகமான பஸ் கட்டண அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக NTC சுட்டிக்காட்டியுள்ளது.
திருத்தப்பட்ட புதிய பஸ் கட்டணக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி கோரி அமைச்சரவைப் பத்திரம் ஒன்று ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக NTC-இன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரண்டா குறிப்பிட்டார். இதற்கமைய, இந்த யோசனை இன்று அமைச்சரவையின் அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளது.
பஸ் உரிமையாளர்களின் எச்சரிக்கை: எவ்வாறாயினும், இந்த பஸ் கட்டணத் திருத்தம் நேற்று (22) முதலே நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனப் பல தனியார் பஸ் சங்கங்கள் முன்னதாகத் வலியுறுத்தியிருந்தன. இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இச்சங்கங்களின் பிரதிநிதிகள் NTC-க்குச் சென்றிருந்த போதிலும், தமக்குத் திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நேற்று கட்டணத் திருத்தம் அமுல்படுத்தப்படாத காரணத்தினால், இன்று (23) பஸ் சேவைகளில் இருந்து விலகிக்கொள்ளப் போவதாக பஸ் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. கட்டண அதிகரிப்புக்கு முறையான அனுமதி கிடைக்கும் வரை பஸ்களை இயக்குவது சாத்தியமற்றது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் (LPBOA) தலைவர் கெமுனு விஜேரத்னவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் திருத்தப்பட்ட பஸ் கட்டணங்கள் இன்று அமைச்சரவையின் அனுமதிக்காகச் சமர்ப்பிக்கப்படும் என்பதை NTC மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
