கொழும்பு: பொரலஸ்கமுவ, மலானி புலத்சிங்கள மாவத்தைப் பகுதியில் இன்று (24) அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், 25 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, மேலும் எட்டு பேருடன் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோதே, முச்சக்கரவண்டியில் வந்த இனந்தெரியாத நபர் இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். கல்கிசைப் பகுதியைச் சேர்ந்த ஜிஹான் துலான் பெரேரா என்பவரே உயிரிழந்துள்ளார்.
இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதே இந்தக் கொலைக்குக் காரணம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.