நாட்டை ஆளும் ஆட்சியாளர்களுக்குப் பௌத்த மதத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
காலி (Galle) பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஆட்சியின் கீழ் இருந்த காலங்களில் கூட பௌத்தத்தைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், எனவே தற்போதைய ஆட்சியாளர்கள் இந்தப் பொறுப்பிலிருந்து நழுவ முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்: “1931 ஆம் ஆண்டின் விகாரைகள் மற்றும் தேவாலயங்கள் கட்டளைச் சட்டம் (Buddhist Temporalities Ordinance) நடைமுறையில் உள்ளது. இதன் கீழ், விகாரைகளுக்குச் சொந்தமான சொத்துக்கள் விகாரைகளுக்கே சொந்தம். நாம் தானமாக வழங்கும் தங்கப் பொருட்கள் அனைத்தும் தேவாலயங்களுக்கோ அல்லது விகாரைகளுக்கோ சொந்தமானது. யாராவது இவற்றில் தலையிட முயற்சித்தால் நாட்டுக்கு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.
1815 ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் பௌத்தத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மகா சங்கத்தினருடன் இணைந்து இதனை முன்னெடுத்துச் செல்வதும், பாதுகாப்பதும் ஒவ்வொரு அரசியல் கட்சியின் கடமையாகும்,” என்று தெரிவித்தார்.
