ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) அழைப்பின் பேரில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக, இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று நள்ளிரவு (மார்ச் 8) பிலிப்பைன்ஸின் மணிலா நோக்கி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புறப்பட்டார்.
மணிலாவிலுள்ள நினோய் அக்வினோ சர்வதேச விமான நிலையத்தை (NAIA) சென்றடைந்த பிரதமரை, பிலிப்பைன்ஸுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி சாணக்க தல்பஹேவா, பிலிப்பைன்ஸ் அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் ஆகியோர் வரவேற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது, மணிலாவில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச மகளிர் தின நிகழ்வில் பிரதமர் முக்கிய உரையற்றவுள்ளார்.
அத்துடன், இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இடையே பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து, பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் பல அமைச்சர்களுடன் பிரதமர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
