கொழும்பு, பெப்ரவரி 04:
வேற்றுமைகளைக் களைந்து, நாட்டின் மனித வளத்தைப் பயன்படுத்தி பொருளாதார ரீதியில் பலமான புதிய இலங்கையைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
“இலங்கையைக் கட்டியெழுப்புதல்” எனும் தொனிப்பொருளின் கீழ், இலங்கையின் 78 ஆவது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இன்று (04) காலை 7.30 மணியளவில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் ஆரம்பமானது.
இந்தத் தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் நாட்டில் இனவாதத்திற்கும் பிரிவினைவாதத்திற்கும் எந்த வகையிலும் இடமில்லை என்றும் வலியுறுத்தினார். அத்துடன், நாட்டின் மனித வளத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான மிகப்பெரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த தற்போதைய அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அரச தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
1948 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறுவதற்காகத் தியாகங்களைச் செய்தவர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்தக் கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த பிரதான நிகழ்வில் முப்படையினர் மற்றும் பொலிஸாரைச் சேர்ந்த 4,500 க்கும் மேற்பட்ட படையினர் கலந்துகொண்டுள்ளதுடன், வெளிநாட்டு இராஜதந்திரிகள் உட்பட சுமார் 400 விசேட அழைப்பாளர்களும் பங்கேற்றுள்ளனர்.
இதேவேளை, சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சுமூகமான போக்குவரத்துப் பாய்ச்சலை உறுதி செய்வதற்காக விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முகாமைத்துவத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கொழும்பு நகரெங்கும் 2,000 க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
