Headlines

2026 வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதம் இன்று ஆரம்பம்! – இரண்டாம் வாசிப்பு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

கொழும்பு, நவம்பர் 15: 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம், அல்லது 80ஆவது வரவு செலவுத் திட்ட உரையின் குழு நிலை அல்லது மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (நவம்பர் 15) பாராளுமன்றத்தில் ஆரம்பமாக உள்ளது.

நவம்பர் 8 ஆம் திகதி ஆரம்பமான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆறு நாட்கள் தொடர்ந்ததுடன், பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களத்தால் திட்டமிடப்பட்டபடி நேற்று (நவம்பர் 14) மாலை 6.00 மணிக்கு நடைபெற்ற வாக்கெடுப்புடன் நிறைவடைந்தது.

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நேற்று (நவம்பர் 14) பாராளுமன்றத்தில் 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. மொத்தமாக 160 பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததுடன், 42 பேர் எதிராக வாக்களித்தனர். எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இன்று ஆரம்பமாகவுள்ள ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழு நிலை விவாதம், மூன்று சனிக்கிழமைகள் உட்பட 17 நாட்கள் நடைபெற்று டிசம்பர் 05 ஆம் திகதி முடிவடையவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 05 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறும்.

இதன் மூலம், முழு வரவு செலவுத் திட்ட விவாதம் நவம்பர் 8 முதல் டிசம்பர் 5, 2025 வரை நடைபெறுகிறது.

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (வரவு செலவுத் திட்ட உரை) இரண்டாம் வாசிப்பை நிதி அமைச்சராகிய ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க நவம்பர் 07 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். பாராளுமன்ற வளாகத்திற்குள் அமைந்துள்ள ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து சபை நாயகர் தலைமையில் பாரம்பரிய முறைப்படி பிற்பகல் 1.30 மணியளவில் ஜனாதிபதி சபை அறைக்கு வருகை தந்தார்.

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் சமர்ப்பிப்பு மாலை 5.50 மணி வரை தொடர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *