அகமதாபாத்: அகமதாபாத்தில் நடைபெற்ற 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதன் மூலம் மூன்று முறை டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற வரலாற்றுச் சாதனையை இந்தியா படைத்துள்ளது.
சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம்: அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ஓட்டங்களை ஆக்ரோஷமாகக் குவித்தது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான சஞ்சு சாம்சன் வெறும் 46 பந்துகளில் 89 ஓட்டங்களைக் குவித்து அணியின் இமாலய ஸ்கோருக்கு வலுவான அடித்தளமிட்டார்.
பந்துவீச்சில் மிரட்டிய பும்ரா: 256 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 19 ஓவர்களில் 159 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. இந்திய அணியின் பந்துவீச்சில் மிரட்டிய ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் வெறும் 15 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியை உறுதி செய்தார்.
சாதனைகளும் விருதுகளும்: இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் மொத்த ஐசிசி கோப்பைகளின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு (10 கோப்பைகள்) அடுத்தபடியாக அதிக ஐசிசி கோப்பைகளை வென்ற இரண்டாவது நாடாக இந்தியா தற்போது திகழ்கிறது. மேலும், சொந்த மண்ணில் டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணி மற்றும் தொடர்ச்சியாகக் கோப்பையைத் தக்கவைத்த முதல் அணி என்ற பெருமையையும் இந்தியா தனதாக்கியுள்ளது.
இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக ஜஸ்பிரித் பும்ராவும், இந்தத் தொடரில் 5 போட்டிகளில் 321 ஓட்டங்களைக் குவித்த சஞ்சு சாம்சன் தொடர் நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
