Headlines

ஐப்பசி பௌர்ணமி: முருகன் அருளால் செல்வ செழிப்பு பெற பனங்கற்கண்டு, சுக்கு படைக்கும் குளிகை நேர வழிபாடு!

சென்னை: பௌர்ணமி வழிபாடுகளில் ஐப்பசி மாத பௌர்ணமிக்கு தனிச்சிறப்பு உண்டு. இது ஆன்மிக சிறப்பும், பல மடங்கு பலன்களை அள்ளித் தரும் அற்புதமான நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் செய்யப்படும் வழிபாடுகள் மட்டுமின்றி சில எளிமையான பரிகாரங்களும் கூட வாழ்வில் இருக்கும் துன்பங்கள் அனைத்தையும் நீக்கி, குறைவில்லாத செல்வ செழிப்பை ஏற்படுத்தும் என்பது நம்பிக்கை.

சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம்

ஐப்பசி பௌர்ணமி என்பது வருடத்திற்கு ஒரு முறை சிவ பெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படும் தினம் என்பது அனைவருக்கும் தெரியும். சிவபெருமானே உலக உயிர்கள் அனைத்திற்கும் தந்தையாக திகழ்வதால் இந்த நாளில் சிவ பெருமானின் லிங்க திருமேனியை முழுவதுமாக அன்னத்தால் மூடி அபிஷேகம் செய்கிறார்கள். பிறகு அந்த அன்னத்தை பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்குவார்கள். அன்னாபிஷேகம் தரிசனம் காண்பதால் கோடி லிங்கங்களை ஒரே நேரத்தில் தரிசித்த அற்புதமான பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சந்திர பகவானின் முழு ஒளிக் காட்சி

ஐப்பசி மாத பௌர்ணமியில் தான் சந்திர பகவான் தன்னுடைய சாபம் முழுமையாக நீங்கி, முழு ஒளியையும் பூமியின் மீது விழச் செய்து, முழு பிரகாசத்துடன் காட்சி தருவதாக சொல்லப்படுகிறது. அறிவியல் ரீதியாகவும், சந்திரன் பூமிக்கு மிக அருகில் வந்து, மிக அதிகமாக பிரகாசிப்பதும் இந்த நாளில் தான் என சொல்லப்படுகிறது.

முருகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு

இந்த நாள் சிவனுக்கு மட்டுமின்றி முருகப் பெருமானுக்கும் மிகவும் உகந்தது ஆகும். இந்த நாளில் முருகப் பெருமானுக்கு இரண்டு பொருட்களை மட்டும் வாங்கி படைத்து வழிபடுவதால், நம்முடைய குடும்பத்திலும், வாழ்க்கையிலும் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து நன்மைகளும், செல்வ செழிப்பும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. குழந்தை, திருமணம், வேலை கிடைக்க, வறுமை நீங்க, நோய்கள் நீங்க, மன நிம்மதி கிடைக்க, வாழ்வில் உயர்ந்த நிலையை பெற, செல்வ செழிப்பு ஏற்பட்ட, மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய என எந்த வேண்டுதலாக இருந்தாலும் இந்த நாளில் முருகனை மனதார வழிபட்டு, ஓம் சரவண பவ என்ற மந்திரத்தை மனதார சொல்லி வழிபடுவது முருகனின் அருளால் நன்மைகள் அதிகரிக்கும்.

இந்த அற்புதமான ஐப்பசி பௌர்ணமி நாளில் குளிகை நேரத்தில் பனங்கற்கண்டு மற்றும் சுக்கு அல்லது வசம்பு ஆகியவற்றை வாங்கி வைத்து, முருகனுக்கு படைத்து வழிபடுவதால், நம்முடைய வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் கரைந்து போய் விடும் என சொல்லப்படுகிறது.

குளிகை நேரத்தின் சிறப்பு

“சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை; சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை” என்பார்கள். அப்படிப்பட்ட சுக்கை சுப்ரமணிய கடவுளுக்கு படைத்து வழிபடுவது சிறப்பானது. பனங்கற்கண்டிற்கும் மருத்துவ குணம் மட்டுமல்ல, அளவில்லாத நன்மைகளை தரும் குணமும் உண்டு. ராகு காலம், எமகண்டம் போல் அல்லாது குளிகை நேரம். குளிகை காலத்தில் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அது மறுபடியும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பது ஐதீகம். இதனால் சுப நிகழ்ச்சிகள், கடனை திருப்பி அடைப்பது, நகைகள் வாங்குவது போன்றவற்றை செய்வதற்கு பலரும் குளிகை நேரத்தை தேர்வு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

முருகப் பெருமானின் அருள் மீண்டும் மீண்டும் நமக்கு கிடைத்து, நன்மைகள் அதிகரிக்கவும், செல்வங்கள் பெருகிக் கொண்டே இருக்கவும் ஐப்பசி பௌர்ணமி நாளில் குளிகை நேரத்தில் இந்த வழிபாட்டினை செய்வது மிகவும் சிறப்புடையதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *