கொழும்பு: சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் வெளிநாடுகளின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து, இலங்கை தனது சுயமரியாதையைக் குறைத்துக்கொள்ளக் கூடாது என, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
‘TV தெரண’ ஊடக வலையமைப்பின் 20ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கொழும்பு பேராயர் இல்லத்தில் நேற்று (09) நடைபெற்ற நன்றி நவிற்சி ஆராதனையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
“பிறரை நகலெடுப்பது உண்மையான முன்னேற்றம் அல்ல,” என வலியுறுத்திய அவர், நாட்டின் 2,600 ஆண்டுகால பாரம்பரியத்தைப் புறக்கணித்து, வெளிநாட்டு செல்வாக்கிற்கு அடிபணியும் மனநிலையை ஏற்றுக்கொள்வது, சுயமரியாதையைக் குறைக்கும் செயல் என்றார்.
“இன்று, ஐந்து குடும்பங்களை எடுத்தால், அவர்களில் குறைந்தது இரண்டு குடும்பங்களாவது அன்றாட வாழ்வாதாரத்திற்காகப் போராடும் குடும்பங்களாகவே உள்ளன,” என நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் குறித்துக் கவலை தெரிவித்த கர்தினால், நாட்டின் முன்னேற்றத்திற்கான மாற்றுப் பாதைகளைக் கண்டறிவது அரசியல் தலைவர்களின் கடமை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் கூட்டுப் பொறுப்பாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.
