இனி அரச அதிகாரிகளுக்கும் டிஜிட்டல் கையொப்பம்
கொழும்பு: அரச அதிகாரிகளின் கடமைகளை இலகுபடுத்துவதற்கும், வினைத்திறனை அதிகரிப்பதற்குமாக, டிஜிட்டல் கையொப்ப முறைமை உத்தியோகப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சின் உள்நாட்டு அலுவல்கள் பிரிவின் அதிகாரிகளுக்காக இந்தத் திட்டம் நேற்று (15) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பொது நிர்வாக அமைச்சர், கலாநிதி சந்தன அபேரத்ன, “மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் திறமையான அரச சேவையை உருவாக்குவதே எமது நோக்கம்,” என்றார். இந்தத் தொழில்நுட்பம் கிராம உத்தியோகத்தர்கள் வரை விஸ்தரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
2006ஆம் ஆண்டின் இலத்திரனியல் பரிவர்த்தனைச் சட்டத்தின் கீழ், மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளின் கையொப்பங்களை டிஜிட்டல்மயமாக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் கையொப்பங்களை வழங்குவதற்கான அதிகாரபூர்வ நிறுவனமாக LankaPay நியமிக்கப்பட்டுள்ளது.
