பரிசளிப்பு விழாவில் இராணுவத்தைப் பாராட்டிய சூர்யகுமார்: வல்லுநர்கள் விமர்சனம்!
துபாய்: இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்குப் பிறகு, இந்திய அணித் தலைவர் சூரியகுமார் யாதவ், வெற்றியை இந்திய இராணுவத்திற்கு அர்ப்பணித்தமை, சில கிரிக்கெட் வல்லுநர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களைச் சமாதானப்படுத்த அவர் அவ்வாறு பேசியிருந்தாலும், பரிசளிப்பு மேடையை அரசியல் கருத்துக்களுக்குப் பயன்படுத்தியது தவறான முன்னுதாரணம் என அவர்கள் கூறுகின்றனர். “ஒருவேளை இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வென்றிருந்தால், அவர்களது தலைவர் இதேபோல இந்தியாவைக் குறை சொல்லியிருக்க மாட்டாரா? அது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல ஆகியிருக்காதா?” என வல்லுநர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
சூரியகுமார் யாதவின் உணர்வுகளில் தவறில்லை என்றாலும், இக்கருத்தை அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருக்க வேண்டும் என்பதே பலரின் வாதமாக உள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின்போது, பரிசளிப்பு மேடைகளின் நாகரிகத்தைப் பேணுவது அவசியம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
