Headlines

மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு தற்காலிக நிறுத்தம்: சுகாதார அமைச்சருடன் உடன்பாடு! (GMOA)

கொழும்பு: அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), இன்று (அக்டோபர் 31) காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்கவிருந்த தீவு தழுவிய பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர், டாக்டர் நளின ஜெயதிஸ்ஸ, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் GMOA பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று இரவு (அக்டோபர் 30) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக GMOA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இடமாற்ற விவகாரத்தில் இணக்கம்

ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையை மீறி, தன்னிச்சையாக அமுல்படுத்த சுகாதார அமைச்சு முயற்சித்த வைத்தியர்களின் இடமாற்றங்களை நிறுத்தி வைப்பதற்கும், அதற்குப் பதிலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையைப் பின்பற்றி குறிப்பிட்ட கால எல்லைக்குள் இடமாற்றங்களை அமுல்படுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது என சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்த இணக்கப்பாடுகள், இன்று இடம்பெறவிருக்கும் சுகாதார அமைச்சின் நிர்வாக வைத்தியர்களுடனான விசேட கலந்துரையாடலின் போது உறுதிப்படுத்தப்படவுள்ளதாகவும் GMOA மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

உறுதிப்படுத்தல் கோரி இடைநிறுத்தம்

இதற்கமைய, எட்டப்பட்ட இணக்கப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, நிர்வாக வைத்தியர்களுடனான கலந்துரையாடலின் போது இணக்கப்பாடுகள் எழுத்து மூலம் உறுதிப்படுத்தப்படும் வரை, பணிப்புறக்கணிப்பை இன்று நண்பகல் 12.00 மணி வரை தற்காலிகமாக ஒத்திவைக்க GMOA அதன் நிறைவேற்றுக் சபை தீர்மானித்துள்ளது.

எட்டப்பட்ட உடன்பாடுகள் உறுதியளித்தபடி அமுல்படுத்தப்படாவிட்டால், பணிப்புறக்கணிப்பு எந்த நேரத்திலும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என GMOA மேலும் எச்சரித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *