இளையராஜாவின் 50 ஆண்டு கால இசைப்பயணம்: தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில் ரஜினி, கமல், ரஹ்மான் வாழ்த்து!
சென்னை: இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தைக் கொண்டாடும் விதமாக, தமிழக அரசு சார்பில் நேற்று (13) சென்னை நேரு விளையாட்டரங்கில் பிரம்மாண்டமான பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவையொட்டி, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், காணொளி மூலம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இவ்விழாவில், தனது சிம்பொனி இசை அனுபவங்கள் குறித்து இளையராஜா உருக்கமாகப் பேசினார். “என் குழந்தைகளுடன் நேரம் செலவிட்டிருந்தால், இந்த சிம்பொனியை எழுதியிருக்க முடியாது,” என அவர் குறிப்பிட்டார்.
ஏ.ஆர். ரஹ்மான் தனது வாழ்த்துச் செய்தியில், “இமாலய சாதனையும், எளிமையும் ஒருங்கே அமைந்த மாமனிதர் இசைஞானி. அவரது சிம்பொனி என்ற சாதனை, ஒவ்வொரு இசைக்கலைஞருக்கும் ஊக்கமளிக்கும்,” என்றார். இந்த விழா, ஒட்டுமொத்த இசைக் கலைஞர்களுக்குமான அங்கீகாரம் எனவும் அவர் பாராட்டினார். திரையுலகில் இந்த நிகழ்வு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
