இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு (IMF) சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!
வாஷிங்டன்: இலங்கையின் பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டம் “ஈர்க்கக்கூடிய முன்னேற்றத்தை” அடைந்து வருவதாகவும், நாடு வலுவான மீட்சி அறிகுறிகளைக் காட்டுவதாகவும் சர்வதேச நாணய நிதியம் (IMF) பாராட்டியுள்ளது.
வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய, சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கொசாக், “இலங்கையில் பணவீக்கம் குறைவாக உள்ளது, அரச வருவாய் சேகரிப்பு மேம்பட்டுள்ளது, மற்றும் சர்வதேச இருப்புக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன,” என்றார். நாட்டின் கடன் மறுசீரமைப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
IMFஇன் ஐந்தாவது மீளாய்வுக் கூட்டத்திற்காக, அதன் பிரதிநிதிகள் குழுவொன்று தற்போது இலங்கையில் உள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார். இலங்கை அரசாங்கம், ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்தத் திட்டத்தின் நோக்கங்களில் உறுதியாக இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
