மீண்டும் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா: 2ஆவது போட்டியிலும் கைகுலுக்காத வீரர்கள்!
துபாய்: நேற்று (21) துபாயில் நடைபெற்ற ஆசியக் கிண்ண சூப்பர் 4 சுற்றின் பரபரப்பான போட்டியில், பாகிஸ்தானை இந்திய அணி மீண்டும் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கடந்த போட்டியைப் போலவே, இந்தப் போட்டிக்குப் பின்னரும் இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொள்ளாததால், சர்ச்சை தொடர்கிறது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், சாஹிப்சாதா ஃபர்ஹானின் 58 ஓட்டங்களின் உதவியுடன், 20 ஓவர்களில் 171 ஓட்டங்களைக் குவித்தது. பின்னர் ஆடிய இந்தியா, தொடக்க வீரர்களான அபிஷேக் ஷர்மா (74) மற்றும் சுப்மன் கில் (47) ஆகியோரின் 105 ஓட்டக் கூட்டணி உதவியுடன், 7 பந்துகள் மீதமிருக்க எளிதில் வெற்றி பெற்றது.
போட்டியின்போது, இந்தியத் தொடக்க வீரர்களுக்கும், பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கும் இடையே பலமுறை காரசாரமான வாக்குவாதங்கள் ஏற்பட்டன. கடந்த போட்டியைப் போலல்லாமல், இம்முறை பரிசளிப்பு விழாவில் இரு அணித் தலைவர்களும் அரசியல்ரீதியான கருத்துக்களைத் தவிர்த்தனர். இந்த சர்வதேச கிரிக்கெட் தொடரில், இவ்விரு அணிகளும் இறுதிப் போட்டியில் மீண்டும் மோத வாய்ப்புள்ளது.
