கொழும்பு: முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகளை நீக்கும் புதிய சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பு 07 விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து இன்று (11) மதியம் வெளியேறினார்.
நேற்று (10) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘ஜனாதிபதிகளின் உரிமைகள் (நீக்கம்) சட்டத்தின்’ பிரகாரம், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் அரச இல்லங்கள், மாதாந்த கொடுப்பனவுகள், செயலாளர் கொடுப்பனவுகள் மற்றும் உத்தியோகப்பூர்வ போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட அனைத்து சிறப்புரிமைகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இந்த புதிய சட்டத்தின் கீழ், முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோரும் தமது உத்தியோகப்பூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். திரு. மஹிந்த ராஜபக்ஷ, ஹம்பாந்தோட்டையில் உள்ள தனது காணி இல்லமான ‘கார்ல்டன்’ இல்லத்திற்குச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் தனது இல்லத்திலிருந்து வெளியேறுவதை முன்னிட்டு, இன்று காலை முதல் அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள் மற்றும் பெருமளவிலான ஆதரவாளர்கள் அவரது இல்லத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
