மட்டக்குளியில் பாரிய போதைப்பொருள் வேட்டை: 33 கிலோ ஹாஷிஷ், ஹெரோயினுடன் ஒருவர் கைது!
கொழும்பு: கொழும்பு, மட்டக்குளி பிரதேசத்தில் நேற்று (29) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில், 33 கிலோகிராமிற்கும் அதிகமான ஹாஷிஷ், ஹெரோயின் உள்ளிட்ட பாரிய போதைப்பொருள் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு வடக்கு வலயக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின்போது, 33 கிலோ 270 கிராம் ஹாஷிஷ், 408 கிராம் ஹெரோயின், 200 போதை மாத்திரைகள் மற்றும் விற்பனைக்குத் தயாராகவிருந்த 7,400 ஹெரோயின் பக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட 38 வயதான சந்தேகநபர், அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் கூட்டாளி என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மட்டக்குளி பொலிஸார், இந்த பாரிய போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
