கொழும்பு, பிப். 24: மாஸ் ஹோல்டிங்ஸ் (MAS Holdings) நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு தொழிற்சாலைகள் மூடப்படுவது இலங்கை பொருளாதாரத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும், இதன் விளைவாக 26,000 பேர் தமது வேலைவாய்ப்புகளை இழக்க நேரிடும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குப்பியவத்த பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும், சில ஆடைத் தொழிற்சாலைகள் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு மாற்றப்படுவது உள்ளூர் தொழிற்துறைக்கு மற்றுமொரு பேரிடியாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “எனது தந்தையும் மறைந்த முன்னாள் ஜனாதிபதியுமான ரணசிங்க பிரேமதாசவினால் அறிமுகப்படுத்தப்பட்ட 200 ஆடைத் தொழிற்சாலைகள் திட்டத்தின் பயனாக உருவான நிறுவனங்களில் மாஸ் ஹோல்டிங்ஸும் ஒன்றாகும்.
இந்நிறுவனத்தின் தொழிற்சாலைகள் விக்டோரியாஸ் சீக்ரெட் (Victoria’s Secret), அடிடாஸ் (Adidas) மற்றும் கால்வின் க்லைன் (Calvin Klein) போன்ற உலகப் புகழ்பெற்ற வர்த்தக நாமங்களை (brands) உற்பத்தி செய்து வந்தன. தற்போது இந்த முன்னணி வர்த்தக நாமங்களை உற்பத்தி செய்யும் வாய்ப்பை இலங்கை இழந்து வருவதாகத் தோன்றுகிறது,” என்று கவலை வெளியிட்டார்.
