விசாகப்பட்டினம்: மகளிர் உலகக் கிண்ணத் தொடரில், 78 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து படுமோசமான சரிவைச் சந்தித்த தென்னாபிரிக்க அணி, மீண்டும் ஒருமுறை நதீன் டி கிளார்க்கின் அபாரமான ஆட்டத்தால், வங்கதேசத்தை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பரபரப்பான வெற்றியைப் பதிவு செய்தது.
விசாகப்பட்டினத்தில் நேற்று (13) நடைபெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய வங்கதேச அணி, 18 வயது வீராங்கனை ஷோர்னா அக்தரின் 35 பந்துகளில் 51 ஓட்டங்கள் என்ற அதிரடி ஆட்டத்தால், 232 ஓட்டங்களைக் குவித்தது.
பின்னர், 233 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி, 78 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. இருப்பினும், மரிசான் கேப் (56), சோலி ட்ரையான் (62) ஆகியோர் அணியை மீட்டனர். இறுதி நேரத்தில், கடந்த போட்டியைப் போலவே, சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்த நதீன் டி கிளார்க், 29 பந்துகளில் 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சோலி ட்ரையான் மற்றும் நதீன் டி கிளார்க் ஆகிய இருவரின் பிடியெடுப்புகளையும் வங்கதேச அணி தவறவிட்டது, போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. இந்த வெற்றியின் மூலம், தென்னாபிரிக்க அணி தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
