சூழல் நேயப் பாடசாலைகளை உருவாக்குவதே இலக்கு”: பேராதனை தாவரவியல் பூங்கா நிகழ்வில் பிரதமர்!
பேராதனை: “நிலைபேறான சூழலைக் கட்டியெழுப்புவதும், கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் சூழல் நேயப் பாடசாலைகளையும், சூழலுக்குப் பொறுப்பான குழந்தைகளையும் உருவாக்குவதே அரசாங்கத்தின் தேசிய தொலைநோக்கு,” என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பேராதனை தாவரவியல் பூங்காவின் 200வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அங்கு புதிதாக நிறுவப்பட்ட ‘மூன் நினைவு தாவரவியல் அருங்காட்சியகத்தை’ நேற்று (28) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
பேராதனை தாவரவியல் பூங்காவை ஸ்தாபித்த அலெக்சாண்டர் மூன் என்பவரை நினைவுகூரும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. “சூழல், விலங்குகள் மற்றும் சமுத்திரத்தின் மீது அன்பு காட்டும் ஒரு உணர்வுபூர்வமான சமூகம் எமக்குத் தேவை. அத்தகைய மாற்றத்தை, கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் வலுவான கலாசாரப் புத்தாக்கத்தின் மூலமே அடைய முடியும் என நாங்கள் நம்புகிறோம்,” எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
