சென்னை: ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் பரவிவரும் நிலையில், “இருபெரும் ஆளுமைகளின் ஈகோ காரணமாக, இது நடப்பது மிகவும் கடினம்,” எனத் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஒரு யூடியூப் சேனல் பேட்டியில் அவர் பேசுகையில், “கமல், தனது படங்களில் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்த வேண்டும் என நினைப்பவர். அதேபோல், ரஜினியும் தனக்கான இடத்தை வேறு யாருக்காகவும் விட்டுத்தர மாட்டார். படத்தின் முக்கியத்துவம், வசனங்கள் என அனைத்தையும் முன்கூட்டியே கேட்டுத் தெளிவுபடுத்திக்கொண்ட பிறகே நடிக்கச் சம்மதிப்பார்,” என்றார்.
“‘ஜெயிலர்’ மற்றும் ‘கூலி’ ஆகிய இரு படங்களிலுமே, சிவகார்த்திகேயனை ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க இயக்குநர்கள் முயன்றபோது, ரஜினி அதனை மறுத்துவிட்டார். ரஜினி படம் என்பது ரஜினியால்தான் ஓட வேண்டும் என அவர் நினைப்பார்,” எனவும் பாலாஜி பிரபு குறிப்பிட்டார்.
இவ்வாறு இருவருமே தங்களது ‘மார்க்கெட்டை’ விட்டுக்கொடுக்காத நிலையில், இருவரையும் திருப்திப்படுத்தும் ஒரு கதையை உருவாக்குவது என்பது மிக மிகக் கடினமான செயல் என அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
