நடிகர் ரோபோ சங்கர் மறைவு: முதல்வர் ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கண்ணீர் அஞ்சலி!
சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் (வயது 46) திடீர் மறைவுக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். உடல்நலக் குறைவால், சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் நேற்று (18) இரவு அவர் காலமானார்.
இது குறித்து நடிகர் கமல்ஹாசன், “ரோபோ சங்கர் என்பது வெறும் புனைப்பெயர். என் அகராதியில் நீ மனிதன். ஆகையால் என் தம்பி. அப்படியென்றால் என்னை விட்டுவிட்டு போய்விடுவாயா?” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின், “தனது பயணத்தைத் தொடங்கி, தமிழக மக்களை மகிழ்வித்தவர் ரோபோ சங்கர்,” எனத் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், ராதிகா சரத்குமார், வரலட்சுமி சரத்குமார், சிம்ரன், சிலம்பரசன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகளும் தமது அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர். “கடுமையான இரைப்பை குடல் இரத்தப்போக்கு மற்றும் பல உறுப்பு செயலிழப்பு” காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
