ஐஸ்’ போதைப்பொருள் கொள்கலன் வழக்கு: சம்பத் மான்பெரி நீதிமன்றத்தில் சரண்!
வலஸ்முல்ல: மித்தெனிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட, ‘ஐஸ்’ போதைப்பொருள் தயாரிப்புக்குரிய இரசாயனப் பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் வழக்கில் தேடப்பட்டு வந்த சம்பத் மான்பெரி, இன்று (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கெஹெல்பத்தர பத்மே’க்குச் சொந்தமானதாகக் கூறப்படும் இந்தக் கொள்கலன்களில், ‘ஐஸ்’ போதைப்பொருள் தயாரிப்பதற்கான இரசாயனங்கள் இருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
தான் நீதிமன்றத்தில் சரணடையத் தயாராக இருப்பதாக, சம்பத் மான்பெரியின் சட்டத்தரணி கடந்த 15ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார். இதனையடுத்து, அவர் சரணடைந்த பின்னர் அவரது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றம் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த குற்றவியல் வழக்கு பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
