பேரை வாவியில் தரையிறங்கிய விமானம்: கட்டுநாயக்க – கொழும்பு நீர் விமான சேவை ஆரம்பம்!
கொழும்பு: கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும், கொழும்பு பேரை வாவிக்கும் இடையிலான நீர் விமான சேவை, போக்குவரத்து அமைச்சர் விமல் ரத்நாயக்க தலைமையில் இன்று (03) உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜோன் கீல்ஸ் குழுமத்தின் துணை நிறுவனமான சினமன் எயார் (Cinnamon Air), இந்த விமான சேவையை இயக்குகிறது. உள்நாட்டு விமானப் பயணத்தை விரிவுபடுத்தி, சுற்றுலாவை மேம்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சேவை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக 2012ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டிருந்த நீர் விமான சேவை, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களால் மீண்டும் சாத்தியமாகியுள்ளது. கொழும்பு துறைமுக நகரத்திலும் நீர் விமான சேவையைத் தொடங்க ஆய்வுகள் நடைபெற்று வருவதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
