அம்பாறை: வடக்கு, கிழக்கில் இன்று (18) முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் போராட்டத்தை, அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் உள்ள மக்கள் நிராகரித்து, வழமைபோன்று தமது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அழைப்பை ஏற்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவளித்திருந்த போதிலும், கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை உள்ளிட்ட பிரதான முஸ்லிம் நகரங்களில் வர்த்தக நிலையங்கள், வங்கிகள் மற்றும் சந்தைகள் வழமைபோல் இயங்கின. மக்கள் நடமாட்டமும் வழமையாகக் காணப்பட்டது.
சில பாடசாலைகளில் மாணவர் வரவு குறைந்திருந்தாலும், கற்றல் நடவடிக்கைகள் இடம்பெற்றன. ஐக்கிய காங்கிரஸ் கட்சி, யாழ். பல்கலைக்கழக மாணவர் சங்கம் போன்ற தரப்பினரும் இந்த ஹர்த்தாலுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தமை, இது முழுமையான ஆதரவைப் பெறவில்லை என்பதைக் காட்டுகிறது.