கொழும்பு: தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் நாளை (நவம்பர் 07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது சுதந்திர இலங்கையின் 80 ஆவது வரவு செலவுத் திட்டமாகும்.
நிதி அமைச்சராகப் பதவி வகிக்கும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவே பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்தவுள்ளார்.
வரவு செலவுத் திட்ட விவாத அட்டவணை
அங்கீகாரம் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் முதல் வாசிப்பு 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் சனிக்கிழமை (நவம்பர் 08) ஆரம்பமாகும்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்காக மொத்தமாக ஆறு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி பி.ப. 6:00 மணிக்கு நடைபெறும்.
குழு நிலையின் விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை 17 நாட்களுக்கு நடைபெறும். அதன் பின்னர் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி பி.ப. 6:00 மணிக்கு நடைபெறும்.
