100 கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் ‘புனருதயட்ட மக’ திட்டம் ஆரம்பம்: 14 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!
களுத்துறை: வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA), இலங்கையின் 119,000 கிலோமீற்றர் வீதிக் கட்டமைப்பை நவீனமயமாக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளது. இதன் கீழ், 100 கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் ‘புனருதயட்ட மக’ தேசியத் திட்டம், நேற்று (16) களுத்துறை மாவட்டம், அகலவத்தையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டிருந்த கிராமிய வீதிகளை மேம்படுத்த, இவ்வருடம் 14 பில்லியன் ரூபாயை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
“ஓராண்டு கால ஆட்சியில், பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் துறைகளில் எமது அரசாங்கம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் எதிர்பார்த்த நாடு படிப்படியாகக் கட்டமைக்கப்பட்டு வருகிறது,” எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த அபிவிருத்திப் பணிகளில் அனைவரையும் கைகோர்க்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.
