சைகை மொழிக்கும் ஏனைய மொழிகளைப் போன்ற அங்கீகாரம்: பாராளுமன்றத்தில் விரைவில் புதிய சட்டம்!
கொழும்பு: சைகை மொழிக்கு, நாட்டின் ஏனைய மொழிகளுக்கு வழங்கப்படும் அதே அங்கீகாரத்தை வழங்கும் புதிய சட்டமூலம் ஒன்று, விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பத்தரமுல்லையில் நேற்று (23) நடைபெற்ற தேசிய சைகை மொழி தினக் கொண்டாட்டத்திலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, “அனைவரும் சைகை மொழியைக் கற்று, அதைப் பயன்படுத்தும்போது, பாகுபாடற்ற ஒரு சூழல் உருவாகும். அத்தகைய சூழலிலேயே மனித உரிமைகள் பாதுகாக்கப்படும்,” என்றார்.
சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, இந்த சட்டமூலம் ஏற்கனவே வரையப்பட்டுள்ளதாகவும், விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் எனவும் குறிப்பிட்டார். இதன்மூலம், சமூகத்தில் காது கேளாதோர் சம உரிமைகளுடன் வாழ வழிவகை செய்யப்படும்.
