சர்வதேச தரத்தில் தேசிய உட்கட்டமைப்பு: உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்த அரசு புதிய திட்டம்!
கொழும்பு: சர்வதேச அங்கீகாரத் தரங்களுக்கு நிகரான, ஒரு தேசிய தர உட்கட்டமைப்பு முறைமையை இலங்கை விரைவில் உருவாக்கும் என விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர், கலாநிதி கிரிஷாந்த அபேசேன அறிவித்துள்ளார்.
இந்த புதிய முறைமையானது, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துப் பொருட்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட சேவைகளின் தரத்தை உறுதி செய்வதையும், மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பொருட்களின் தரத்தை மதிப்பிடுவதற்கும் இது உதவும்.
இந்தத் திட்டத்திற்காக, இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. “ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசின் முன்னுரிமை. அதற்குத் துல்லியமான சர்வதேசத் தரங்களைப் பேணுவது அவசியம்,” என அமைச்சர் குறிப்பிட்டார். இந்த முயற்சிக்கு ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பு (UNIDO) ஆகியவை தொழில்நுட்ப ஆதரவை வழங்குகின்றன.
